Published : 03 Oct 2019 12:53 PM
Last Updated : 03 Oct 2019 12:53 PM

திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம்

அதிமுக ஜெயிப்பது முக்கியமல்ல; திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம், தென்னம்மாதேவியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "விக்கிரவாண்டி தொகுதியில் குறைகள் இருந்தால், நிச்சயம் தேர்தலுக்குப் பின்னர் அவை சரி செய்யப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கூறியே வெற்றி பெற்றது.

ஆனால், இம்முறை அதிமுக ஜெயிப்பது முக்கியமல்ல. இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதும் முக்கியமல்ல. திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

இடைத்தேர்தலில் நாம் பெறும் வெற்றிதான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம். இதே கூட்டணியோடும், உற்சாகத்தோடும் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் எளிதாக வெற்றி பெற்று விடலாம். விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரிய பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

யார் நினைத்தாலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியாது. நவம்பர் முதல் வாரத்துக்குள்ளாகவே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு விடும்" என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x