

புதுடெல்லி
ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைகேட்டு அவசர வழக்காக விசாரிக்க அதிமுக எம்எல்ஏ இன்பதுரை செய்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது கோரிக்கை மனுவில், “வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என அப்பாவு தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்தத் தொகுதியில் பதிவான 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் வரும் 4-ம் தேதி மீண்டும் எண்ண வேண்டுமென்று உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். தான் பிறப்பித்த உத்தரவுக்குத் தானே தடை விதிக்க அதிகாரம் உள்ளதா? என்றும், தேர்தல் ஆணைய கால அவகாசம் கேட்பது குறித்தும் வரும் 3-ம் தேதி (இன்று) வழக்காக விசாரிப்பதாக தெரிவித்து 3-ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்பதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு ஒன்று மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு செய்யப்பட்டது. ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் நாளை மறுவாக்கு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை மறுவாக்கு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளதால் உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அயோத்தி வழக்கில் இருப்பதால் இதுபோன்ற முறையீடுகள் மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் அனுமதிக்காக வந்தது.
ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை முறையீட்டை விசாரித்த நீதிபதி ரமணா அமர்வு, ''தேர்தல் வழக்குதானே? அதில் என்ன பிரச்சினை உள்ளது. வழக்கு பட்டியலிடப்படாமல் அவசர வழக்காக விசாரிக்க முடியாது. பட்டியலிடப்பட்டு வந்தால் விசாரணைக்கு எடுக்கிறோம்'' என நிராகரித்தது.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை முறையீடு குறித்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.