Published : 03 Oct 2019 10:22 AM
Last Updated : 03 Oct 2019 10:22 AM

பொள்ளாச்சியில் தேங்கும் கடத்தல் வாகனங்கள்- ஏலமிடாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

எஸ்.கோபு

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக பொதுமக்கள் பயன்பெற பருப்பு, பாமாயில் கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் குறைந்த விலையிலும், உணவுக்கான அரிசி விலையில்லாமலும் வழங்கப்படுகின்றன. மேலும் அரசு மாணவ, மாணவியர் விடுதி மற்றும் சத்துணவுக் கூடங்களுக்கும் அரிசி வழங்கப்படுகிறது.

இதில் ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசியை, கடத்தல்காரர்கள் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி பகுதி கேரள மாநிலத்தின் எல்லைக்கு அருகே இருப்பதால், பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் செம்மணாம்பதி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், வாளையாறு சாலைகள் வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றன. இவற்றை ரகசிய தகவலின் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸார், வருவாய்த் துறையின் பறக்கும் படையினர் பிடிக்கின்றனர். அரிதாக மட்டுமே வாகனங்களுடன் அதன் ஓட்டுநர்களும் பிடிபடுகின்றனர். மற்ற நேரங்களில் ஓட்டுநர்கள் அரிசி கடத்தல் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பிவிடுகின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி பகுதியில் பிடிபட்ட லாரி, வேன், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம். அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

கடத்தலின்போது பிடிபடும் ரேஷன் அரிசி, பொள்ளாச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்
படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறையினர் பறிமுதல் செய்து, தங்களின் அலுவலகம் அருகே திறந்தவெளியில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட
குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வோர் அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கான கடத்தல் வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன. பொள்ளாச்சியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேர்ந்துவிட்டதால், இடப்பற்றாக்குறை காரணமாக ஒன்றின் மீது ஒன்றாக நிறுத்தி உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் வாகனங்கள் தொடர்பான விவரங்கள் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர், உரிய அனுமதி பெற்று ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏல நடைமுறை, தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

இரும்புக் குப்பையாக மாறும் அவலம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள், வழக்கின்போது நீதிமன்ற சொத்தாக மாறிவிடுவதாலும், வழக்கு விசாரணை முடிய குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிவிடுவதாலும், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து உருக்குலைந்து வீணாகும் அவல நிலைக்கு உள்ளாகிறது.
பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகின்றன. இதனால், அவற்றின் மதிப்பு குறைந்து, ஏலத்தின்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கும் வழி வகுக்கிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு ஏலம் விட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலமாக, பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என்றனர்.

மாதந்தோறும் 20 வாகனங்கள் பறிமுதல்

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் குமார் கூறும்போது, ‘நீதிமன்றத்தில் வழக்கு
முடிந்ததும், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும், அவர்கள் வாகனத்தை மீட்க வரவில்லை
யெனில், ஆர்டிஓ அலுவலகம் மூலமாக வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பின்னர், தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் வாகனங்கள் ஆன்லைன் வழியாக ஏலம் விடப்படும்போதும், இங்குள்ள வாகனங்களும் ஏலத்தில் விடப்படும்.
பொள்ளாச்சியில் மாதந்தோறும் சுமார் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் 160 வாகனங்கள் ஏலமிடப்பட்டன. தற்போது நிலுவையிலுள்ள 400 வாகனங்களில், 66 வாகனங்களை ஏலமிடுவதற்கான சட்ட நடைமுறைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஏலமிடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், கடத்தல் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் தேங்கிவிடுகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x