Published : 02 Oct 2019 01:06 PM
Last Updated : 02 Oct 2019 01:06 PM

தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் நீதிபதிகளா?- இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை

தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் நீதிபதிகளா என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக, மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசு கூட்டமைப்பு, அரசியல் அமைப்பு நிறுவனங்கள், வரலாற்று ஆய்வு அமைப்புகள், அறிவியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மதவாத சக்திகளைப் பணியில் அமர்த்தி வருகிறது.

இந்துத்துவக் கருத்தியலின் ‘இந்துராஷ்டிராவைக்’ கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் நீதித் துறையில் தலையீடு செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் எழுதப், படிக்கத் தெரியாதவர்கள், தமிழ்நாட்டின் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்ற வழிவகுக்கும் நீதிபதிகள் பணித் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்கள், அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் நீதிபதிகளானால் எண்ணிப் பார்க்க முடியாத எதிர்விளைவுகள் ஏற்படும். நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன முறையினையும், கட்டமைப்பையும் சீர்குலைக்கும், பாஜக மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் சட்டம் பயின்றுள்ள, பயின்று வரும் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதுடன், சாமானிய மக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை, தமிழர் சமூக வாழ்வின் பழக்க வழக்கம் உள்ளிட்ட பண்பாட்டு மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x