Published : 02 Oct 2019 11:36 AM
Last Updated : 02 Oct 2019 11:36 AM

முன்னெப்போதையும் விட காந்தியை நினைவில் நிறுத்த வேண்டும்: ஸ்டாலின்

சென்னை

முன்எப்போதும் இல்லாததை விட காந்தியையும் இந்தியா குறித்த அவரின் எண்ணத்தையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று பிற்பகலில் செல்கிறார்.

முன்னதாக இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் காந்தி பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில் திமுக தலைவர் ஸ்டாலின் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் , ''இந்நாளில், என் சக இந்தியர்களோடு இணைந்து, 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களைப் போற்றுகிறேன்.

அகிம்சை, இரக்கத்தைக் கற்பித்த அண்ணல் காந்தியடிகள், கருத்து வேறுபாடு, துன்ப துயரங்களின் போது, மன உறுதியோடு அதனை எதிர் கொள்ள வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.

முன்னெப்போதையும் விட, அண்ணலையும் - இந்தியா குறித்த அவரின் எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்திட வேண்டும்.

என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்!'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x