Published : 02 Oct 2019 11:05 AM
Last Updated : 02 Oct 2019 11:05 AM

காந்தி பிறந்தநாளில் பாத யாத்திரை: புதுச்சேரி காங்கிரஸ் மரியாதை

புதுச்சேரி
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி நகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பாத யாத்திரையை நடத்தப்பட்டது. .

காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காந்தி சிலையில் இருந்து இன்று காலை பாத யாத்திரை தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்டு எஸ்.வி. படேல் சாலை, அண்ணா சாலை, ராஜா திரையரங்கு, அண்ணா சதுக்கம், பழைய பஸ் நிலையம், சுப்பையா சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையில் பாத யாத்திரை நிறைவடைந்தது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தி திருவுருவப்படம் தாங்கிய அலங்கார வண்டி, முன்னால் அணி வகுத்து வந்தது. தேச பக்தி பஜனைப் பாடல்களும் பாத யாத்திரையில் இசைக்கப்பட்டன. இந்த யாத்திரையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், முதல்வர் நாராயணசாமி, மாநிலத்தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். மாநில முக்கிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனையும், தேச பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தலைவர்கள் யாரும் உரையாற்றவில்லை.

- செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x