

சென்னை
ராதாபுரம் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைகேட்டு எம்எல்ஏ இன்பதுரை முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது கோரிக்கை மனுவில், “வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என அப்பாவு தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்தத் தொகுதியில் பதிவான 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் வரும் 4-ம் தேதி எண்ண வேண்டுமென்று உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று அவசர முறையீடு செய்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத் தரப்புக் கருத்தை நீதிபதி கேட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில், “ 4-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது சிரமம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும், வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாகக் கொண்டு வர வேண்டும். ஆகவே கால அவகாசம் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தான் பிறப்பித்த உத்தரவுக்கு தானே தடை விதிக்க அதிகாரம் உள்ளதா? என்றும், தேர்தல் ஆணைய கால அவகாசம் கேட்பது குறித்தும் வரும் 3-ம் தேதி வழக்காக விசாரிப்பதாக தெரிவித்து 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.