Published : 01 Oct 2019 12:01 PM
Last Updated : 01 Oct 2019 12:01 PM

பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துங்கள்; 6 வயது மாணவி வழக்கு: அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்படுத்தக் கோரி 6 வயது மாணவியும், அவரது தந்தையும் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தைப் புதுப்பிக்க வேண்டும் என 6 வயது மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தையும் வழக்கறிஞருமான பாஸ்கரனும் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கோயில் ஒன்றை ஒட்டிச் செயல்பட்டு வரும் பள்ளி வளாகம், பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது எனவும், சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பள்ளியைப் புதுப்பிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருவரும் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியை முன்னேற்ற அனைத்து ஏற்பாடும் செய்து வருவதாகக் கூறும் அரசும், அரசு அதிகாரிகளும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், பொன்னேரி வட்டாட்சியர், தொடக்கக்கல்வி இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்குத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கை நேற்று (செப்.30) விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அன்றைய தினம் அரசு வழக்கறிஞருக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x