

சென்னை
காந்தி பிறந்த நாள் அன்றாவது, தன் மகன் பேரறிவாளனுக்கு நியாயம் கிடைக்கட்டும் என, அவரது தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், நளினி ஆகியோர் 28 ஆண்டுகளைக் கடந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என, உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்யும்படி, ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததற்கு, எழுவர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் காரணமாக இருக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அந்த வழக்கும் கடந்த மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்து கடந்த செப்டம்பர் 9-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்நிலையில், நாளை காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தன் மகன் பேரறிவாளனுக்கு நியாயம் கிடைக்கட்டும் என, அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அற்புதம் அம்மாள் இன்று (அக்.1) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது என்று சொன்ன காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளிலாவது அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.