Published : 30 Sep 2019 05:54 PM
Last Updated : 30 Sep 2019 05:54 PM
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வரும் அக்டோபர் 17-ம் தேதி ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு அளித்து இருந்தனர். அவர்களில் ஜான்குமாருக்கு முதல்வர் நாராயணசாமியின் ஆதரவு இருந்தது. பலத்த போட்டிக்கு இடையில் ஜான்குமார் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு இரு தினங்களுக்கு முன்பே காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இச்சூழலில் ஜான்குமார் இன்று காலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் ராகு காலம் கழித்து மதியம் 12 மணிக்கு மேல் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டு தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது திமுக தரப்பில் எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "கடந்த 3 ஆண்டு கால அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளோம். அதையடுத்து நாளை கூட்டணிக் கட்சியினருடன் கலந்து ஆலோசிப்போம். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து வருகிற 17-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், காமராஜ் நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
இதேபோல் காமராஜ் நகர் தொகுதியில் ராஜஸ்தான் மக்கள் அதிகமாக இருப்பதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் பிரச்சாரம் செய்ய புதுச்சேரி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT