

சென்னை
ஐ.நா. சபையில் புறநானூற்றை பிரதமர் மோடி மேற்கோள் காட்டியது குறித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பேரவையில் நேற்று (செப். 27) உரையாற்றிய பிரதமர் மோடி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். ஐ.நா. கூட்டத்தில் அவர் பேசும்போது, ''ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பண்பாடு இந்தியப் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம். வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம. அனைத்து மக்களையும் , எங்கள் மக்களாக கருதுகிறோம்.
புது இந்தியா, பன்னாட்டு நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் நாடு கூறியது'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.குருமூர்த்தி கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,
''உண்மையில் மோடி உலகத்தில் தமிழைத் திணிக்கிறார். உலகின் பழமையான மொழியான தமிழின் விளம்பரத் தூதர் மோடி. ஆனால் கிணற்றுத் தவளைகளாக இருக்கும் தமிழ் இனவாதிகள், மோடி மீது குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அவர் இந்தியைத் திணிப்பதாகச் சொல்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.