Published : 28 Sep 2019 01:54 PM
Last Updated : 28 Sep 2019 01:54 PM

தமிழ் வழி இட ஒதுக்கீடு; தமிழ் வழியில் படித்த சான்றிதழ் பெறாவிட்டால் தகுதி இல்லை: உயர் நீதிமன்றம் தெளிவு

சென்னை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

சிவில் நீதிபதிகள் தேர்வில், தமிழ் வழியில் சட்டம் படித்த போதும், தங்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழியில் படித்து, தமிழில் தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தகுதியுள்ளதா? தமிழில் பாடம் நடத்தப்படாமல், தமிழில் பல்கலைக் கழக தேர்வு எழுதியவர்கள் இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கார்த்திகேயன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், தமிழ் வழியில் படித்தவர் என சான்றிதழ் பெற வேண்டும் என தெளிவுபடுத்தியது.

கல்லூரி அல்லது பல்கலைக் கழக தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதினால் மட்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமையில்லை என தெரிவித்த நீதிபதிகள், கல்லூரி படிப்பை தமிழ் வழியில் படித்தார் என, கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக் கழக பதிவாளர் சான்றளித்தால் மட்டுமே, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியும் எனக் கூறியுள்ளனர்.

தமிழ் வழியில் படித்தவர் என சான்றிதழ் வழங்காத விண்ணப்பதாரர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x