Published : 28 Sep 2019 09:52 AM
Last Updated : 28 Sep 2019 09:52 AM
அ. அருள்தாசன்
திருநெல்வேலி
திருநெல்வேலியில் 501 வாரங் கள் கம்பராமாயண தொடர் சொற் பொழிவு நடத்தி நெல்லை கம்பன் கழகம் சாதனை படைத்துள்ளது.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்திலுள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் வாரந்தோறும் ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது. கடந்த 22-ம் தேதி 501-வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுவாகவே இலக்கிய கூட்டங்களுக்கு ஆர்வம் குறைந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக சொற்பொழிவை மிகவும் எளிமையாக இக்கழகம் சிறப்பாக நடத்தியுள்ளது சாதனையாக கருதப்படுகிறது.
நெல்லை மாவட் கம்பன் கழகம் பல ஆண்டுகளுக்குமுன் எம்.எஸ்.சுந்தரம் பிள்ளையால் நிறுவப் பட்டது. அவரது காலத்துக்குப்பின் இக்கழகம் செயல்படவில்லை. இந்நிலையில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, கவிஞர் பொன்.வேலுமயில் உள்ளிட்ட அறிஞர்கள், புரவலர்கள், கம்பன் ஆர்வலர்களின் முயற்சியால் கடந்த 14.8.2008-ல் நெல்லை கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
தொடக்க விழாவில் அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் டி.பிச்சாண்டி பங்கேற்று இக்கழகத்தை தொடங்கி வைத்தார். அதுமுதல் பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்திலுள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் வாரந்தோறும் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
கடந்த 3.2.2019-ம் தேதி 10-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
500-வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 15.9.2019-ம் தேதி நடைபெற்றது.
இது தொடர்பாக நெல்லை கம்பன் கழகத்தின் செயலாளர் கவிஞர் பொன். வேலுமயில் கூறியதாவது:
தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாலை 6.30 மணி முதல் இரவு 7.15 மணிவரை கம்பராமாயணம் தொடர்பாக ஆய்வுரை, கம்பராமாயணம்- பிற இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுரைகளை அறிஞர்கள் நிகழ்த்துகிறார்கள். தொடர்ந்து இரவு 8.15 மணிவரை ஒரு மணிநேரத்துக்கு கம்பன் காப்பியத்தை தொடர் சொற்பொழிவாகவும், இசை பேரூரையாகவும் தற்போதைய கம்பன் கழக தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி நிகழ்த்தி வருகிறார். தற்போது 6 சுற்றுகள் நிறைவடைந்து 7-வது சுற்று நடைபெற்று வருகிறது.
ஆய்வு பொழிவுக்கான பொருட்கள் அனைத்தும் கம்ப ராமாயணம் தொடர்புடையதாகவே கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு ஆங்கில மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒட்டக்கூத்தரின் உத்தர காண் டத்தை தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கும், ஆர்வமுடை யோருக்கும் சொற்பொழிவாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆன்மிகம் மற்றும் கம்பராமாயணம் தொடர்பான பல்வேறு நூல் களும் இந்நிகழ்ச்சிகளில் வெளியிடப்படு கின்றன’’ என்றார் அவர்.
இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என்ற நெடிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக 501-வது நிகழ்ச்சி கடந்த 22-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT