Published : 27 Sep 2019 09:31 PM
Last Updated : 27 Sep 2019 09:31 PM

அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி இடஒதுக்கீடு ஏன் வழங்கக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏன் தனி இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 207 இடங்களும் நிரப்பப்படாததால், அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று கட்ட கலந்தாய்வுக்குப் பின், காலியிடங்கள் இருந்தால் ஒரு இடத்துக்கு 10 மாணவர்கள் என்ற விகிதத்தில் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் எனவும், ஆனால் அந்த பட்டியலின் அடிப்படையில் நிரப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக இந்நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 207 இடங்களும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், பள்ளிப்படிப்புக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்பவர்கள், மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளை நாடுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு ஏன் வழங்க கூடாது? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவ கல்லூரிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x