ஓமனில் காணாமல் போன ராமநாதபுரம் மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு

ஓமனில் காணாமல் போன ராமநாதபுரம் மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு
Updated on
1 min read

ராமநாதபுரம்

ஓமன் நாட்டில் காணாமல் போன ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 4 பேரின் குடும்பத்தினர், அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் கே.கார்மேகம்(50), கா.காசிலிங்கம்(35), தி.ராமநாதன்938, ஆர்.காசிலிங்கம்(23), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாலுகா ஏ.சிலுவைதாசன் ஆகிய 5 தமிழக மீனவர்கள் மற்றும் வங்க தேச நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் என 8 பேர் கடந்த 14-ம் தேதி ஓமன் நாட்டில் மசீரா தீவில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் .

திடீரென அப்பகுதி கடலில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் படகுடன் கரை திரும்பவில்லை. அதனால் காணாமல் போன ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் மீ்ட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி ஆகியோர், ஆட்சியர் கொ.வீரராகவ ராவை சந்தித்து மனு அளித்தனர்.

ஆட்சியர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, "தமிழக மீனவர்கள் 5 பேர் ஓமன் நாட்டில் காணாமல் போய் உள்ளனர். இதனால் அதிர்ச்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்ற மீனவர்கள் 6 படகுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கண்டுபிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளனர். அவர்களை அந்நாட்டு அரசு ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in