Published : 26 Sep 2019 08:33 PM
Last Updated : 26 Sep 2019 08:33 PM

சுபஸ்ரீ மரணம்: அலட்சியம் காட்டிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை- ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை

பேனர் விழுந்ததால் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் அலட்சியம் காட்டிய காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

கடுமையான அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

"அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்?’’ என்று கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

“மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.

காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த காவல்துறை பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. இதேப்போன்று மாநகராட்சி அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 14 ( பெருங்குடி) அதிகாரிகள் மீது குற்றம் பதிவுசெய்யப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவி பொறியாளர் கமல்ராஜ் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரவி வர்மன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் படி பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொடுக்கும் விளக்கத்தை பொருத்து பணிஇடைநீக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.என் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பிரிவு '9B' கீழ் குற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது . இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் தரப்பிலும் விளக்கம் கேட்கப்படும். பின்னர் விசாரணை அறிக்கை மாநகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பணி இடைநீக்கம் அல்லது ஊதிய உயர்வு ரத்து அல்லது பணி உயர்வு ரத்து அல்லது அதிகபட்சமாக பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x