Last Updated : 26 Sep, 2019 05:09 PM

 

Published : 26 Sep 2019 05:09 PM
Last Updated : 26 Sep 2019 05:09 PM

உதித் சூர்யாவுக்குப் பதிலாக நீட் தேர்வு எழுதிய நபர் யார்?- ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை

தேனி

மாணவர் உதித் சூர்யாவுக்குப் பதிலாக நீட் தேர்வு எழுதிய அந்த நபர் யார்? என்று கைதான உதித் சூர்யா மற்றும் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சையில் சிக்கிய தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர்.வெங்கடேசன் மற்றும் தாயார் கயல்விழி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் காலை 9 மணி முதல் தற்போதுவரை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தர்போதைய நிலவரப்படி, அவர்களிடம், உதித் சூர்யாவுக்குப் பதிலாக நீட் தேர்வு எழுதிய நபர் யார்? அந்த நபருடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது? யார் அவரை அறிமுகப்படுத்தியது? இதற்காக யாரை அவர்கள் சந்தித்தனர்? கல்லூரி சேர்க்கைக்கு ஒத்துழைத்தவர்கள் யார்? சென்னை மற்றும் அருகிலேயே சேர்க்க வாய்ப்பிருந்தும் தேனியை தேர்ந்தெடுத்தது ஏன்? தேனி மருத்துவக் கல்லூரியில் இதற்காக யாரேனும் உதவி செய்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

அதேபோல் தேனி மருத்துவக் கல்லூரி டீனிடம், மருத்துவக் கல்லூரி குழுவினர் மாணவரிடம் நடத்திய விசாரணையில் புகார் உண்மை என்று தெரிந்ததும் ஏன் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட மாணவரின் சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி சேர்க்கையில் மற்றவர்களின் தலையீடு இருந்ததா என்பது உள்ளிட்ட விசாரணையும் நடைபெற்றதாகத் தெரிகிறது.

கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டதா?

இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஏதும் இல்லை. குறைவான சேமிப்புத்திறன் இருந்ததால் அழிக்கப்பட்டது என்று மருத்துவக்கல்லூரி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மாணவரின் வருகைப் பதிவேட்டிலும் திருத்தம் உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x