

சென்னை
பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வுக்கு சிறப்புக் குழு அமைப்பது தாமதத்திற்கு வழிவகுக்கும் என, திமுக பொருளாளரும், தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, துரைமுருகன் இன்று (செப்.26) வெளியிட்ட அறிக்கையில், "பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக - கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டியளித்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், "ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண இரு மாநிலங்கள் சார்பிலும் தலா 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என அறிவித்திருப்பதும்; "இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள முதற்கட்டமாக இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறோம்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதும்; 31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், அதன் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம் மற்றும் தூணக்கடவு மற்றும் சமவெளிப்பகுதியில் ஓடுகின்ற ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் இரண்டாவது 1955-1960 ஐந்தாண்டுத் திட்டத்தில் கேரள அரசின் இசைவுடன், தமிழ்நாடு அரசினால், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த நதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் வழங்கல், தொழிற்சாலை மற்றும் இதர உபயோகங்களுக்காகப் பயன்படுத்தும் பொருட்டு, 09.11.1958 முதல் முன் தேதியிட்டு, திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது 29.5.1970 அன்று கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கேரள முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் உடன் 10.5.1969 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, தலைவர் கருணாநிதி வித்திட்ட இந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
திமுக ஆட்சியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 9.11.1988 இல் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், 1989-ல் மீண்டும் முதல்வராக வந்த கருணாநிதி தான் சீரிய முயற்சிகளை எடுத்தார். முதன்முதலில் 21.9.1989 அன்று இந்த ஒப்பந்த மறு ஆய்வுக்கான ஆவணங்கள் இரு மாநிலங்களுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.
அதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு, 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தவரும் கருணாநிதி தான். அந்தக் கோரிக்கையை கேரள முதல்வரும் ஏற்றுக்கொண்டு, இரு மாநிலங்களின் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் திருவனந்தபுரத்திலும், சென்னையிலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
மறு ஆய்வு ஒப்பந்த ஆவணப் பரிமாற்றம் ஒப்பந்தத்தில் எந்தெந்த இனங்களில் திருத்தம் தேவை, அப்படி, திருத்தம் தேவைப்படும் எல்லா இனங்கள் தொடர்பான தொகுப்பு ஆகியவை திமுக ஆட்சிக் காலத்திலேயே கேரள அரசுடன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் 21.1.2011 அன்று நடைபெற்ற இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், ஆனைமலையாற்றிலிருந்து 2.5 டிஎம்சி அடி நீரை தமிழ்நாட்டிற்கு திருப்பும் திட்டம், மணக்கடவின் மேற்பகுதியில் 0.50 டிஎம்சி அடி சமச்சீர் நீர்த்தேக்கம் திட்டம், நீராறு-நல்லாறு பல்நோக்கு நேர் இணைப்புத் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு, கேரள அரசின் கருத்தும் கோரப்பட்டு, அதன் பிறகு மீண்டும் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இரு மாநில மக்களும் பாரம்பரியமாகப் போற்றிப் பாதுகாத்துவரும் சகோதரத்துவ குணத்தின் அடையாளமாக, பல்வேறு கட்டங்களாக பல நிலைகளில் திமுக ஆட்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்த மறு ஆய்வு தொடர்பான பணிகள் அடுத்தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணித்துவந்த நிலையில், 8 ஆண்டுகளாக அதிமுக அரசு அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.
குறிப்பாக முதல்வராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நீண்ட அமைதி காத்து வந்த பழனிசாமி, திடீரென விழித்து எழுந்ததைப் போல, இப்போது கேரளா முதல்வரைச் சந்தித்திருப்பது வரவேற்புக்குரியது என்றாலும்;, மீண்டும் பத்து பேர் கொண்ட குழு என்று வெளிவந்துள்ள அறிவிப்பு தமிழக மக்களுக்கு குறிப்பாக மேற்கு மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது.
ஏற்கெனவே இது போன்று அரசு செயலாளர்கள், இரு மாநில தலைமைச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்தாய்வு நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் குழு அமைப்பது பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் மேலும் கூடுதல் காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதுடன்; இரு மாநிலங்களுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பயன்களையும், அதன் மூலம் எட்டப்பட்டுள்ள கருத்தொற்றுமைகளையும் பாழ்படுத்தும் விதத்திலும் அமைந்து விடும்.
ஆகவே, மீண்டும் குழு என முதலில் இருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி, தாமதத்திற்கு வழி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இந்த சந்திப்பு அமைந்து விடக்கூடாது என்றும், மறு ஆய்வு ஒப்பந்தத்தை விரைந்து ஒரு குறுகிய கால வரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பு துறை அமைச்சராகவும், முதல்வராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கேரள அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களை மேலும் காலதாமதம் செய்யாமல் பாதுகாத்திட வேண்டும். அதுதொடர்பாக நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்," என துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.