Published : 25 Sep 2019 02:24 PM
Last Updated : 25 Sep 2019 02:24 PM
சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பில் பகவத் கீதை, தத்துவவியல் ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில் யோகா, பல்வேறு உபநிடதங்கள், உலகம் தோன்றியது எப்படி, ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையேயான உறவு, பேச்சுக்கும் சுவாசத்துக்குமான புரிதல், மனதை வெற்றி கொள்வது குறித்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன அறிவுரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாடத் திட்டத்தில் உள்ளன. இவை அனைத்தும் தத்துவவியல் பாடத்துக்குள் வருகின்றன.
பாடத்திட்டம் சாரா கூடுதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக தத்துவவியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழும அறிவுறுத்தலின்படியே இப்படிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்வோ, மதிப்பெண்களோ இல்லை
தத்துவவியல் பாடத்துக்குத் தேர்வுகள் நடத்தப்படாது. மதிப்பெண்களும் கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் இதைப் படிக்கலாம். பாடத்திட்டம் சாரா கூடுதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக (Extra Curricular activities) தத்துவவியல் பாடம் கருதப்படும்.
பொறியியல் படிப்பின் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் 3-வது செமஸ்டரில் தத்துவவியல் அறிமுகம் செய்யப்படும். விடுமுறை நாட்களிலும் வேலை ஓய்வு நேரங்களிலும் இதற்கான பாடங்கள் எடுக்கப்படும். இதற்காக துறைசார் வல்லுநர்கள் வெளியில் இருந்து அழைத்து வரப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT