Last Updated : 25 Sep, 2019 02:34 PM

 

Published : 25 Sep 2019 02:34 PM
Last Updated : 25 Sep 2019 02:34 PM

நாங்குநேரி தொகுதி: 2016 சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு?

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் வாக்குகள் சிதறியதால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் வென்றது. அதன் உறுப்பினர் வசந்தகுமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார். அவர் எம்.பி.யாக தேர்வானதால் அவர் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணி உடல்நலக் குறைவால் மரணமடைந்ததால் அந்தத் தொகுதியும் காலியானது. இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரையில் இந்த முறையும் திமுக ஆதரவுடன் காங்கிரஸே களமிறங்குகிறது. ஆளும் கட்சியான அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. அந்தக் கட்சியின் சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்கும்போதெல்லாம் பெரும்பாலும் வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடித்தாலும், நாங்குநேரி தொகுதியில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது. அதிமுக வேட்பாளர் விஜயகுமார், காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாங்குநேரி தொகுதி: 2016 சட்டப்பேரவைத் தேர்தல் கட்சிகள் பெற்ற வாக்குகள்

வேட்பாளர்

கட்சி

வாக்குகள்

வசந்தகுமார்

காங்கிரஸ்

74932

விஜயகுமார்

அதிமுக

57617

சுரேஷ்

பார்வர்டு பிளாக்

14203

ஜெயபாலன்

தேமுதிக

9446

மணிகண்டன்

பாஜக

6609

கார்வண்ணன்

நாம் தமிழர்

2325

இசக்கி முத்து

சுயேச்சை

1903

திருப்பதி

பாமக

660

ஜெகதீசன்

சுயேச்சை

559

தங்கேஸ்வரன்

பகுஜன் சமாஜ்

533

நோட்டோ

1399


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறித்ததில் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் சுரேஷுக்கு முக்கியப் பங்கு உண்டு. 14203 வாக்குகள் பெற்ற அவர் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பதம் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதுபோலவே தேமுதிக, பாஜக வேட்பாளர்களும் ஓரளவு வாக்குகளைப் பிரித்ததால் அதிமுக வெற்றி பாதிக்கப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x