

சென்னை
தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்காக எத்தனை மயானங்கள் உள்ளன? என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் பட்டியலினத்தவர்கள் மயானங்கள் செல்ல பொதுவழி இல்லாத நிலை உள்ளது. இது அவ்வப்போது செய்தியாக வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு உடலைப் பொது வழியில் அனுமதிக்க மறுத்ததால் பாலத்தின் மீதிருந்து கட்டி இறக்கும் அவல நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்காரமாரி கிராமத்தில் உள்ள காலனித் தெருவில் உள்ளவர்கள் மயானத்திற்குச் செல்ல பழைய, புதிய என இரண்டு வாய்க்கால்களைக் கடந்து செல்ல வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பொன்னாற்று வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. இந்நிலையில் வக்காரமாரி காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவருடைய உடலைத் தண்ணீரில் மூழ்கியபடி மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் செய்தித்தாள்களில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது, மேற்கண்ட செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ்,
* தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் வாரியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு எத்தனை மயானங்கள் உள்ளன?
* சடலங்களை அடக்கம் செய்ய போதுமான இடம் வழங்கப்பட்டுள்ளதா? இல்லையா?
* மயானத்தற்குச் செல்ல போதுமான சாலை வசதிகள் உள்ளதா?
என தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட ஆட்சியர்கள் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.