தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப்.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது.

நாளை (செப்.25) மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது. அதிகபட்ச மழை அளவாக, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ. மழையும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வலிமையான காற்று வீசப்பட இருப்பதால், குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழகக் கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in