மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா?- உயர் நீதிமன்றம் கேள்வி

மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா?- உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
2 min read

மதுரை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் சிக்கிய மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். இவரது மகன் உதித் சூர்யா (21). இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

உதித் சூர்யா படிப்பைத் தொடர்ந்த நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் வந்தது. இதுகுறித்த தகவல் போலீஸாருக்கும் கிடைத்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ ப்படிப்பில் சேர்ந்தது உறுதியானது.

இந்தப் புகார் எழுந்தவுடன் உதித் சூர்யா மன உளைச்சலாக இருக்கிறது என கல்லூரியிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறினார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் டாக்டர் வெங்கடேசன், மாணவர் உதித் சூர்யாவை விசாரிக்க தனிப்படை போலீஸார் சென்னைக்குச் சென்றபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நீதிமன்றம் கேள்வி:

இதற்கிடையில் மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா என்று அவருடைய வழக்கறிஞர்களிடம் வினவினார். மேலும், இதற்கான சாத்தியத்தை மாணவர் தரப்பிடமே கேட்டுத் தெரிவிக்கும்படி வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், உதித் சூர்யா வழக்கு முழுமையாக எப்போது சிபிசிஐடியின் வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) தலைமறைவாகியுள்ள மாணவர் உதித் சூர்யா வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் மனு விவரம்..

மாணவர் உதித் சூர்யா தனது ஜாமீன் மனுவில், " கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. அதில் நான் 382 மதிப்பெண்களைப் பெற்று இந்திய அளவில் 6704 ஆவது இடத்தைப் பிடித்திருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது.

சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னர், அதிகாரிகள் திருப்தி அடைந்ததன் பேரிலேயே இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்தேன். இந்நிலையில் தீவிர மனநலப் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி செப்டம்பர் 12-ம் தேதி படிப்பை நிறுத்த முடிவெடுத்தேன்.

இந்நிலையில் செப்டம்பர் 17-ம் தேதி ஊடகங்களில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக செய்தி வெளியானது. அவர்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்று செல்போனில் எடுக்கப்பட்டது. மற்றொன்று ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது.

ஆகவே, இரு புகைப்படங்களுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் என் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் 20 வயதே நிரம்பியவர் என்பதால், கைது செய்யப்பட்டால் எனது எதிர்கால வாழ்வு வீணாகும் நிலை உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணைக் குழுவினரிடமும் உள்ளது.

அதோடு வழக்கு தொடர்பாக எல்லாவித ஒத்துழைப்பையும் வழங்க உறுதி கூறுகிறேன். ஆகவே தேனி கண்டமனூர்விலக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு முன்ஜாமீன் மனு மீதான நீதிமன்ற உத்தரவு எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in