Published : 23 Sep 2019 02:59 PM
Last Updated : 23 Sep 2019 02:59 PM
டெல்லி
1000 இடங்களில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''இந்தி பிரச்சார சபா போல மற்ற மொழிகளையும் உலகம் முழுக்கக் கொண்டு சென்று சேர்க்க, ஓர் அமைப்பு உருவாகி வருகிறது. இந்தக் கட்டமைப்பில் தமிழ் வளர் மையத்துக்கு உதவி கேட்க டெல்லி வந்துள்ளோம்.
குறிப்பாக முதல்வரிடம் இதுதொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வெளியே வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேல். வெளிநாடுகளில் 1 கோடியே 25 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பல தமிழர்களின் வீடுகளில், அடுத்த தலைமுறையினர் தமிழ் பேசுவதில் தடுமாற்றம் உள்ளது.
ஏனெனில், அந்தந்த அரசுகள் பெரிதாக அதை உற்சாகப்படுத்துவதில்லை. இந்த இடங்களில் உள்ள தமிழர்கள், தமிழைத் தாங்கிப் பிடிக்கவும் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் தமிழ் வளர் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. ஆயிரம் இடங்களில் இந்த மையங்களை உருவாக்க எண்ணியுள்ளோம்.
சென்னையில் தக்ஷின் பிரச்சார் சபா இந்தி மொழிக்காகச் செயலாற்றுகிறது. இந்தப் பிரச்சார சபையின் மூலம் இந்தியா முழுவதும் 54 கோடி மக்கள் இந்தி தெரிந்தவர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழை முதலில் தேசிய மொழியாக அறிவித்தது சிங்கப்பூர்தான். அங்கே அதிகாரபூர்வ மொழியாகவும் தேசிய மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. தமிழ் வளர் மையங்கள் முதன்முதலில் சிங்கப்பூர் அரசால் உருவாக்கப்பட்டன. சிங்கப்பூரில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு முதலில் தாய்மொழியைப் படிக்க வேண்டும், அது மலாய், சைனீஸ், தமிழ் என எதுவாகவும் இருக்கலாம். இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவதாக, தாய்மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ள 3 மொழிகளில் தாய்மொழியைத் தவிர்த்த வேறு மொழியைப் படிக்க வேண்டும்'' என்றார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT