Published : 23 Sep 2019 01:55 PM
Last Updated : 23 Sep 2019 01:55 PM

சுபஸ்ரீ மரணம்: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சுபஸ்ரீ மரணம் குறித்த விவகாரத்தில் குற்றவாளிகள், தடுக்காத அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசுத் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

கடுமையான கண்டனத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுபஸ்ரீ உயிரிழப்பு குறித்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ள நிலையில், பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் குறித்து இளைய தலைமுறை அமைப்பைச் சேர்ந்த தமிழ் மணி என்பவர் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழ் மணி தாக்கல் செய்த மனுவில், “சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீதும், காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்கரணை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன், ஆனால் போலீஸார் நிராகரித்து விட்டனர்.

இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்தவர்கள் மீதும், அனுமதி அளித்த காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கெனவே நீதிபதி சத்திய நாராயணன் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. ஆகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது” என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில், “இதுவரை உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இல்லை என்பதால் இதை விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை எடுப்பதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது . சுபஸ்ரீ மரணம் குறித்த விவகாரத்தில் குற்றவாளிகள், தடுக்காத அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசுத் தரப்பு பதிலளிக்கவேண்டும்.

உண்ணாவிரதத்துக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை புதன்கிழமைக்கு (செப்.25) ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x