Published : 23 Sep 2019 02:17 PM
Last Updated : 23 Sep 2019 02:17 PM

தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை; சென்னையில் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, ''வங்கக் கடலில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சியானது, நகர்ந்து இன்னும் 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி வரவுள்ளது. மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும்.

வட தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் (25-ம் தேதி) கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புண்டு.

சென்னை நிலவரம்

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புண்டு. தென் தமிழகக் கடலோரப் பகுதி, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் 24,25-ம் தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x