Published : 23 Sep 2019 11:12 AM
Last Updated : 23 Sep 2019 11:12 AM

புதிய திருப்பம்; கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்: ஆளுநர் தமிழிசை உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை

கனிமொழி வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல வழக்கை வாபஸ் வாங்க விரும்புவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, வேட்புமனுவில் கணவரின் வருமானத்தைத் தெரிவிக்கவில்லை, ஆரத்தி எடுத்தவர்களுக்குப் பணம் வழங்கினார் என்றும் அவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மக்கள் ஒரு வேட்பாளரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவரின் வருமானத்தை கனிமொழி மறைத்தது தவறு எனவும், பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், ஏற்கெனவே தமிழிசை தரப்பில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்துப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 23- ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புதிய திருப்பமாக கனிமொழிக்கு எதிரான தாங்கள் தொடர்ந்த திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று தமிழிசை தரப்பு வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்து கேட்டுக்கொண்டார்.

தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதுகுறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை தொடர்வதா, தள்ளுபடி செய்வதா என்பது குறித்து முடிவெடுக்க வரும் அக்.14-க்கு வழக்கை ஒத்திவைத்தார். தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கும் அன்று எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x