Published : 23 Sep 2019 11:01 AM
Last Updated : 23 Sep 2019 11:01 AM

பண்டைய எகிப்தியர்கள் தமிழ்க்குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்: பிரான்ஸ் நாட்டு மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் தகவல்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே இரவிமங்கலத்தில் ஆய்வு மேற்கொண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல்.

பழநி

பண்டைய எகிப்தியர்கள் தமிழ்க்குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பா மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பே தமிழர்களின் ஆதிக்கம் உலகளவில் இருந்துள்ளது, என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் டோமின்செமினல் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல். இவர் மனித இனம் பரவியது குறித்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார். சில மாதங்களாக இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பழநிக்கு வருகைதந்தார். பழநி அருகேயுள்ள இரவிமங்களம் பகுதியில் உள்ள கல்வட்டங்கள், பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பழங்கால குகை ஓவியங்கள், ஆயக்குடி பகுதியில் உள்ள கல்திட்டை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவருக்கு உதவியாக பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உடன் சென்றார்.

தனது ஆய்வு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் நேற்று பழநியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வியாபித்து இருந்த திராவிடர்கள்...

கடல் ஆதிக்கத்தில் பழந்தமிழர்களே முன்னோடியாக இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக கிடைத்துள்ளது. திராவிடர்கள், தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பது தவறானது. அவர்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்துள்ளனர். ஐரோப்பியர்களின் வருகை இல்லாதிருந்தால் உலகத்தை தமிழர்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டுவந்திருப்பார்கள்.

எகிப்தியர்கள் தமிழ்க்குடிகளாக இருந்திருக்க வாய்ப்பு...

எகிப்தியர்களின் உருவ அமைப்பு, தமிழர்களின் உருவ அமைப்புகளுடன் ஒத்துப்போகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி போன்ற ஆடைகளையே அவர்களும் அணிந்துவருகின்றனர். பண்டைய எகிப்தியர்கள் தமிழ்க்குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

கிரேக்க மன்னர் அலெக்சாண்டரின் படையெடுப்பால் பல அடையாளங்கள் அழிந்துவிட்டன. பழந்தமிழர்களின் மனிதபரவல் குறித்து விவபரங்கள் தெரியாமல் போனது. எகிப்தில் இறந்தவர்கள் உடலை பதப்படுத்த ஒரு வகை எண்ணெய் பயன்படுத்தியுள்ளனர். இதற்குத் தேவையான ஏலக்காய்களை தமிழர்கள் மூலமாகவே அனுப்பிவைக்கப்பட்டு வர்த்தகம் நடந்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா, மலேசியா, ஜாவா, மடகாஸ்கர், இலங்கை, தென்னாப்பிரிகா நாடுகுளில் வசிக்கும் மக்களின் மரபணுக்கள், தமிழர்களின் மரபணுக்களுடன் ஒத்திருக்கிறது. இது இன்றய அறிவியல் ஆராய்ச்சிகளின் மரபணுக்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பியர்களிடம் தமிழர் மரபணு..

உலகில் உள்ள ஐரோப்பியர்களின் உடலில் ஒரு சதவீதமாவது தமிழர்களின் மரபணுக்கள் இல்லாமல் இருக்காது. இதன் மூலம் தமிழர்களின் இனப்பரவல் இருந்திருப்பது உறுதியாகிறது. கடல் ஆதிக்கத்தில் பண்டைய தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர்.
ஐரோப்பா மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பு தமிழர்களின் ஆதிக்கம் உலகளவில் இருந்துள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x