Published : 23 Sep 2019 10:29 AM
Last Updated : 23 Sep 2019 10:29 AM
கி.மகாராஜன்
மதுரை
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர திமுகவைப்போல் களப்பணியாற்ற வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவிடம் மதுரை தொழில் அதிபர்கள் யோசனை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகள் 35-ஏ, 370 ஆகியவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் தொழில் முனைவோர்கள், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ் நேற்று முன்தினம் மதுரை வந்தார். அவர் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் முத்துராமலிங்கம், அப்போலோ முதன்மை செயல் அலுவலர் ரோகினி ஸ்ரீதர், வடமலையான் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் புகழகிரி ஆகியோரை சந்தித்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக விளக்கினார். பின்னர் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் பாஜக வேகமாக வளர வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அதற்கு 1960, 1970 ஆண்டுகளில் திமுக எவ்வாறு களப்பணியாற்றியதோ, அதேபோல் பாஜக களப்பணியில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆனால் அந்த திட்டங்கள் மக்களிடம் போய் சேரவில்லை. அதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதில் கவனம் செலுத்துவதாக முரளிதரராவ் உறுதியளித்தார்.தொழில் அதிபர்களுடனான சந்திப்பு தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT