Published : 22 Sep 2019 07:11 PM
Last Updated : 22 Sep 2019 07:11 PM

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை

தமிழகத்தின் 14 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. அடையாறு, அயனாவரம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, மாம்பலம், கோட்டூர்புரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, போரூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலையில் நீர் வெள்ளம் போல் ஓடியது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், சேலம், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, கரூர் ஆகிய 14 மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பரவலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் போச்சம்பள்ளி, பென்னாகரம் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், பள்ளிப்பட்டு பகுதியில் 6 செ.மீ. மழையும், திண்டிவனம், வத்திராயிருப்பு பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x