Published : 22 Sep 2019 06:02 PM
Last Updated : 22 Sep 2019 06:02 PM

தோல் தொழில் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே பேச்சு 

சென்னை

தோல் தொழில் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே கலந்துகொண்டு, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

''தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை. இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் கச்சா மற்றும் பாதியளவு தயாரிக்கப்பட்ட தோல்களுக்கு ஏற்றுமதி வரி சீரமைக்கப்படும் என்று அறிவித்ததன் காரணமாக இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், கவுரவமான முறையில் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், தோல் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில், தமது சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து உதவி செய்ய வேண்டும்.

குறிப்பாக, காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடை மற்றும் சிறு கடைகளை அமைத்துக் கொடுத்து, அவர்களது தொழிலை முறைப்படுத்த உதவ வேண்டும்.

தோல் ஆடைகள் மற்றும் காலணி உற்பத்தியில், இந்தியா, உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மொத்த தோல் உற்பத்தியில் இந்தியா 13% பங்கு வகிக்கிறது. வருங்காலத்திலும் இத்துறை மேலும் வளர்ச்சியடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

கடந்த காலத்தில் காலணி மற்றும் உப பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மிகுந்த பாரம்பரிய கைவினைத்திறன் கொண்ட நாடாகத் திகழ்ந்து வந்தது. ஆக்ரா, கான்பூர், ஆம்பூர் போன்ற தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் உயர் திறன் வாய்ந்த கைவினைஞர்கள், தரமான காலணிகளைத் தயாரித்து வருகின்றனர். இந்தத் திறனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தோல் தொழில் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, ஏற்றுமதி வரியை மாற்றியமைத்துள்ளது. தோல் தொழில் துறையில் காலத்திற்கேற்ற நாகரிக வடிவமைப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தோல் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் இருப்பதால், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, ஆடம்பரத் தோல் பொருட்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும்''.

இவ்வாறு மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x