Published : 22 Sep 2019 10:15 AM
Last Updated : 22 Sep 2019 10:15 AM
ஈரோடு
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் நேற்று திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பேனர் விழுந்து உயிரிழந்த சுபயின் வீட்டிற்கே சென்று ஆறுதல் தெரிவித்தோம். 3 ஆண்டுகளாகவே பேனர் வைப்பதை தவிர்க்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இளைஞர் அணியில் எந்த நிகழ்ச்சியிலும் பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார். இதுவரை எந்த பதிலும் இல்லை.
திமுகவில் பல அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிக்குத் தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு குறைந்தது 10 ஆயிரம் பேர் என 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என அறிவித்தோம். இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் 30 லட்சத்திற்கும் அதிகமாக உறுப்பினர்கள் சேர்வர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, என்றார்.
திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, முன்னாள் எம்பி கந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT