Published : 21 Sep 2019 03:16 PM
Last Updated : 21 Sep 2019 03:16 PM

திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு: க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார். இதையடுத்து, அவர் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மே மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் ராதாமணி, கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக, அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (செப்.21) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அக்டோபர் 6-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்," என அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x