Published : 21 Sep 2019 02:35 PM
Last Updated : 21 Sep 2019 02:35 PM

இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை: பெங்களூருவில் டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க வந்தார்.

அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அமமுகவுக்கு இன்னும் சின்னம் கிடைக்கவில்லை. அதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது. இடைத்தேர்தலில் மட்டுமல்ல சின்னம் கிடைக்கும்வரை வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடுவதாக இல்லை" என்றார்.

அதிமுக - அமமுக இணைப்புக்கு நீங்கள்தான் குறுக்கே இருப்பதாக திவாகரன் கூறியிருக்கிறாரே என நிருபர்கள் கேட்க, "அது திவாகரனின் கருத்து. நான் எதற்கும் தடையாக இல்லை" எனக் கூறிச் சென்றார்.

தேர்தல் 21-ல்; வாக்கு எண்ணிக்கை 24-ல்:

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x