Last Updated : 20 Sep, 2019 03:56 PM

 

Published : 20 Sep 2019 03:56 PM
Last Updated : 20 Sep 2019 03:56 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

மதுரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தது.

கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தூத்துக்குடி வழக்கில் சிபிஐ விசாரணையில் திருப்தியில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கூறிவந்தன.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணை நிலவரம் என்னவென்று மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.

அப்போது விசாரணையை முடிக்க அவகாசம் கோரி சிபிஐ டிஎஸ்பி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது சிபிஐ இயக்குநர் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது ஒரு வழக்கும், போலீஸார் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அறிக்கையைப் படிக்க கால அவகாசம் வேண்டுமென்பதால் நீதிபதிகள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் 2-வது முறையாக விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x