Last Updated : 20 Sep, 2019 02:39 PM

 

Published : 20 Sep 2019 02:39 PM
Last Updated : 20 Sep 2019 02:39 PM

மாநில தொல்லியல் துறையின் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை வரலாற்றின் புதிய திறவுகோல்: மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பாராட்டு

மதுரை

மாநில தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை வரலாற்றின் புதிய திறவுகோல் என மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பாராட்டியுள்ளார். மேலும், மாநில அரசின் இந்த அறிக்கையால் கீழடி தொடர்பான பொய்யான வாதங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். கீழடியில் நடைபெற்ற ஆய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை நேற்றைய தினம் தமிழக அரசு வெளியிட்டது தொடர்பாகப் பேசினார்.

இந்திய வரலாற்றுக்கு புதிய வெளிச்சம்..

அப்போது அவர், "பத்து நாட்களுக்கு முன்பு நான் கீழடிக்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு தமிழக அரசு இந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் வைத்தேன்.

நேற்றைய தினம் தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டதை நான் மகிழ்வோடு வரவேற்கிறேன். அறிக்கையின் முடிவுகள் எதிர்பார்த்ததைவிட இந்திய வரலாற்றுக்கு புதிய வெளிச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கீழடியின் வயது கி.மு. 6-ம் நூற்றாண்டு என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது.

இரண்டாம் கட்ட அகழாய்வின்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கரிம வேதியியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் வயது 290 எனக் கூறியது அந்தமாதிரி களெல்லாம் 6 மீட்டர் ஆழத்தில் மூன்று மீட்டரில் எடுக்கப்பட்டவை.

இப்போது, மாநில தொல்லியல் துறை, இன்னும் அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட கீழடி மாதிரிகளை அனுப்பியதால் அவை கிமு 6-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய மைல்கல். சங்ககாலம் என்பதும் கீழடி நகரம் என்பதும் 2200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது.
ஒரு ஏக்கர் பரப்பில் 89 தங்க தாயக் கட்டைகள் கிடைத்துள்ளது என்றால் அப்போது இருந்த பண்பாட்டு செழிப்பையும் நாகரிக செழிப்பின் அடையாளத்தையுமே இது வெளிப்படுத்தியிருக்கிறது" என்றார்.

தமிழக வரலாற்றில் புதிய திறவுகோல்

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ் மொழி மிகப்பழமையான இந்திய மொழி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கி.மு 600-க்கு முற்பட்டு எழுதப்பட்ட எழுத்து எங்குமே கிடைக்கப்பெறாதபோது அது தமிழகத்தில் கிடைத்திருப்பது தமிழ்மொழி தான் மிகப் பழமை வாய்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் சிந்து வெளி குறியீடுகளோடு ஒத்துப்போகிறது. இது தமிழக வரலாற்றில் புதிய திறவுகோலாகும்" எனக் கூறினார்.

சர்வதேச தரத்தில் காட்சியகம்..

மேலும் அவர், "மத்திய அரசு வாட் நகரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. கீழடியில் அதுபோன்று சர்வதேச தரத்திலான காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

உத்தரப் பிரதேசம் சலோனியில் பழங்கால தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்துள்ளனர். அதேபோன்று கீழடி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய ஒரே புவியியல் நிலப்பரப்பில் உள்ள இடம். இவற்றை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

பொய் வாதத்தை முறியடித்த மாநில அரசு..

மாநில தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் இடைநிலை அறிக்கை மட்டும் வெளிவந்துள்ளது. மூன்றாம் கட்ட ஆய்வு நடத்திய ஸ்ரீராமன் கீழடியில் தொடர்ச்சியான கட்டுமானங்கள் இல்லை என்ற பொய்யான வாதத்தை முன்வைத்தார். ஆனால், அந்த வாதம் தற்போது, மாநில அரசால் முறியடிக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x