Published : 20 Sep 2019 09:25 AM
Last Updated : 20 Sep 2019 09:25 AM
சென்னை
சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரித்து அக்டோபர் 4-ம் தேதி வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் நீதிமன்றத்தில் அளித்துள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலை தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவுறுத்தியது. அதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளது. அதில், ‘சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்து அன்றே புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அக்டோபர் 1-ம் தேதி அப்பட்டியலை அச்சுப்பணிக்கு அனுப்ப வேண்டும். அக்டோபர் 3-ல் அச்சுப் பணிகளை நிறைவு செய்து பட்டியலை பெற வேண்டும். அக்டோபர் 4-ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அடுத்த நாள் அப்பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT