Last Updated : 19 Sep, 2019 03:27 PM

 

Published : 19 Sep 2019 03:27 PM
Last Updated : 19 Sep 2019 03:27 PM

கொடைக்கானலில் அனுமதி பெறாத வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை: தடை விதிக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

மதுரை

கொடைக்கானலில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொடைக்கானல் நகராட்சி பகுதியி்ல் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் விதிமீறி கட்டப்பட்டிருக்கும் அனைத்து மதங்களைச் சேர்ந்த வழிபாட்டு தலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி பகுதியில் கட்டிட வரைபட அனுமதியை நகராட்சியில் முறையாகப் பெறாமல் கட்டப்பட்டிருக்கும் விழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு எதிராக வழிபாட்டு தலங்கள் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், "கொடைக்கானல் நகராட்சியில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மிகவும் பழமையானது. இவைகள் புதிதாக கட்டப்பட்டவை அல்ல. எனவே வழிபாட்டு தலங்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு இன்று (வியாழன் கிழமை) விசாரித்தது.

கொடைக்கானல் நகராட்சி வழக்கறிஞர் டி.எஸ்.முகமது முகைதீன் வாதிடுகையில், கொடைக்கானல் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து, வழிபாட்டு தலங்கள் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. முறையாக கட்டிட வரைபட அனுமதி பெற்று வழிபாட்டு தலங்கள் கட்டப்படாததால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x