Published : 19 Sep 2019 03:02 PM
Last Updated : 19 Sep 2019 03:02 PM

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ரூ.1093 கோடி ஓய்வூதிய பணப்பயன்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்குவதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (19.9.2019) தொடங்கி வைத்தார்.

இது குறித்த தமிழக அரசு செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழக அரசு போக்குவரத்துப் பணியாளர்களின் நலன் கருதி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் (2011-12 முதல் 2018-2019 வரை) பங்கு மூலதன உதவி (Share Capital Assistance), கடன் (Loan), வழிவகை முன்பணம் (Ways & Means Advance), உதவித்தொகை (Grant), மாணவர் கட்டணச் சலுகையை ஈடு செய்தல் (Reimbursement of Student Concession) ஆகிய வகைகளில் 15,040 கோடியே 9 லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

குறிப்பாக, ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு ஆகிய சட்டரீதியான பணப்பலன்கள் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான வட்டி முதலியன வழங்கும் பொருட்டு, 2017-2018 ஆம் நிதியாண்டில் 2,147 கோடியே 39 லட்சம் ரூபாயும், 2018-2019 ஆம் நிதியாண்டில் 487 கோடியே 56 லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.

மேற்படி, தமிழ்நாடு அரசின் நிதியுதவி மூலம் மார்ச் 2018 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சட்டரீதியான பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டரீதியான பணப்பலன்களான சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு, பங்களிப்பு ஓய்வூதியம் ஆகியவற்றினை வழங்கும் பொருட்டு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் 1,093 கோடி ரூபாயை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - மதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி சார்ந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் உள்ள பல்வேறு நிலுவைத் தொகைகளான வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பணிக்கொடை வித்தியாசம் மற்றும் நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து, ஆக மொத்தம் 6,283 ஓய்வுபெற்ற பணியாளர்கள் பயனடைவார்கள்.

அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று 9 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களுக்கான காசோலைகளை வழங்கினார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை - மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x