Published : 19 Sep 2019 01:58 PM
Last Updated : 19 Sep 2019 01:58 PM
புதுச்சேரி
அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அதிமுக முன்னணித் தலைவர்களும், தமிழக முதல்வரும் கற்றுத் தர வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் தானே அதிமேதாவியாகவும், தனக்குதான் அனைத்தும் தெரியும் என்ற தலைக்கனத்தோடு உளறி வருபவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
பித்துபிடித்தவர் போல் பேசி வரும் இவர் சோனியாவை பெண்ணென்றும் பாராமல் ஒருமையில் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது. ராகுலையும், காங்கிரஸையும் அரசியல் நாகரிகம் மறந்து பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை மறந்து தனது பதவியைக் காப்பாற்ற மோடியின் காலில் விழுந்து மோடியை டாடி என்று அழைத்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவருக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அதிமுக முன்னணித் தலைவர்களும், தமிழக முதல்வரும் கற்றுத் தர முன்வர வேண்டும். கீழ்த்தர விமர்சனம் தொடர்பாக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
மாண்புகளை மறந்து நாகரிகமற்றுப் பேசித் திரியும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போன்றோரை நாட்டு மக்கள் வருங்காலங்களில் புறந்தள்ள வேண்டும். இதே அருவருக்கத்தக்க பாணியில் விமர்சித்து வந்தால் அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT