Published : 19 Sep 2019 11:05 AM
Last Updated : 19 Sep 2019 11:05 AM

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்ல சூழலை ஏற்படுத்துக; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக லாரி உரிமையாளர்களிடம் உடனடியாகப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செப்.19) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர்களுடன் உடனடி பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான அபராதத் தொகையைக் குறைக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தேசிய அளவில் சுமார் 45 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகளும் இயக்கப்படாத நிலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்படுவார்கள். மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்வோரும் பாதிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த வேலை நிறுத்தத்தால் அன்றாடம் லாரியில் கொண்டு செல்லப்படும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் மற்றும் மற்ற அத்தியாவசியப் பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் லாரி தொழிலை நம்பி அன்றாடம் பொருளாதாரம் ஈட்டும் ஏழை, எளிய மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

அதேபோல லாரிகள் இயக்கப்படாத நிலையில் லாரி உரிமையாளர்களும், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக லாரிகள் இயக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைவதால், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, லாரி உரிமையாளர்களுக்கும், அரசுக்கும் வருவாய் கிடைக்காமல் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதைத் தாண்டி லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் சார்ந்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக லாரி உரிமையாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்தி லாரிகள் இயக்கப்படுவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும், லாரி தொழிலைக் காப்பாற்ற வேண்டும்," என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x