Published : 19 Sep 2019 09:08 AM
Last Updated : 19 Sep 2019 09:08 AM
சென்னை
தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்தது. தொடர்ந்து, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவித்து பணிகள் தொடங்கிய நிலையில் நீதிமன்ற வழக்கால் தள்ளிப்போனது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான அட்டவணையை நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கடந்த மே மாதம் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக மாநில தேர்தல் அதிகாரியாக ஊரக வளர்ச்சித் துறை ஆணையரை மாநில தேர்தல் ஆணையம் நியமித்தது. தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியரைத் தவிர மற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.
பின்னர், வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மாநில தேர்தல் ஆணையரக செயலர் எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை மாவட்டம் தவிர்த்த மற்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிகள், 3-ம் நிலை நகராட்சிகளின் செயல் அலுவலர்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் ஆணையர்கள் அல்லது அரசு அதிகாரிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT