Published : 18 Sep 2019 08:35 PM
Last Updated : 18 Sep 2019 08:35 PM

வேட்பாளர்கள் தொடர்புடைய அறக்கட்டளை சொத்து விவரங்கள்; வேட்பு மனுவில் தெரிவிக்க திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு  உயர் நீதிமன்றம் யோசனை

சென்னை

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.க.செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.

அவரது வெற்றியை எதிர்த்து அந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஆர்.செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “கு.க.செல்வம் தலைவராக உள்ள ஸ்ரீ ஜெயா கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமாக மதுரவாயலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த விவரத்தை கு.க.செல்வம் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. ஆகவே அவரது வெற்றி செல்லாது” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கு.க.செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “இந்தச் சொத்து அறக்கட்டளையின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை பொதுமக்களுக்கான அறக்கட்டளை. அந்த அறக்கட்டளையின் பெயரிலேயே வருமான வரி செலுத்தப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணக்குமார், தேர்தல் வழக்கில் எம்.எல்.ஏ. கு.க.செல்வத்துக்கு எதிராகக் கூறியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x