Last Updated : 18 Sep, 2019 04:01 PM

 

Published : 18 Sep 2019 04:01 PM
Last Updated : 18 Sep 2019 04:01 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது உண்மைதான்: தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் பேட்டி

ஆண்டிப்பட்டி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளதாக டீன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் குறித்து எனக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் வந்தது.

தேனி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர். ராஜேந்திரன்

அந்தப் புகாரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் வேறு, கல்லூரியில் சேர்ந்த மாணவர் வேறு என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக உடனே போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டதோடு, மாநில சுகாதாரத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இதற்கிடையில், மாநில சுகாதாரத் துறைக்கு தேனி மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x