

பெருநகர சென்னை மாநகராட்சியின் அலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் தரமான இயற்கை உரம் மலிவு விலையில் நேரடியாக வீடுகளுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான தரமான உரம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.20க்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இக்குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்குச் சேகரமாகும் மொத்தக் குப்பையிலிருந்து சுமார் 400 மெட்ரிக் டன் அளவிலான மக்கும் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றிலிருந்து தரமான உரம் தயாரிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள் வரை சுமார் 160 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி இடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் கையிருப்பு உள்ளது.
இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உரங்கள் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபரேட்டரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு உகந்தவை என தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி இவ்வகையிலான இயற்கை உரம் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வுரங்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் சார்பாக 9445194802 என்ற அலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டோ அல்லது வாட்ஸ்-அப் செயலியில் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவையான உரத்தின் அளவைக் குறிப்பிட்டு முழு முகவரியை வழங்கினால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டுவந்து வழங்கப்படும்.
உரத்திற்கான பணம் வீடு தேடி வந்து உரத்தை வழங்கும்போது பெற்றுக்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.