Published : 17 Sep 2019 05:32 PM
Last Updated : 17 Sep 2019 05:32 PM
மதுரை
நெல்லையில் இருந்து தென்காசி புதிய மாவட்டம் பிரிப்பு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதற்காக வருவாய் நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் பிரிப்பு தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.17 மற்றும் அன்று மாலையில் குற்றாலத்திலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இவ்விரு கூட்டங்களிலும் அரசியல் கட்சியினர் மட்டுமே பங்கேற்றனர். பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இந்த கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
ஆலங்குளம் நெல்லைக்கு மிக அருகே உள்ளது. ஆலங்குளத்தில் இருந்து தென்காசி செல்ல போதிய பஸ் வசதியில்லை. இதனால்
ஆலங்குளத்தை தென்காசி மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது என மாவட்டம் பிரிப்பு குழுவிடம் தெரிவித்துள்ளோம்.
எனவே ஆலங்குளம், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகே மாவட்டம் பிரிப்பு
தொடர்பு முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கருத்து கேட்டு கூட்டங்களுக்கு பிறகே தென்காசியில் எந்தெந்த தாலுகாக்களை சேர்ப்பது என முடிவெடுக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT