Published : 17 Sep 2019 05:27 PM
Last Updated : 17 Sep 2019 05:27 PM

நன்றி மறந்தவனா தமிழன்?- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

கன்னியாகுமரி

தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 8 கோடி தமிழர்களையும் தான் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்களை என்று நேற்று சொல்லும்போது, 8 கோடி தமிழர்களையும் நான் சொல்லவில்லை. தமிழர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்து, அரசியல் பிழைப்பு நடத்துகின்றவர்கள் உள்ளனர். அவர்கள் தமிழை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்களை அரவணைக்கும் மனப்பான்மையில் அவர்கள் இல்லை" என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை, கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழ்மொழி மிகமிகப் பழமையான மொழி. இந்த வார்த்தையை இதுவரை எந்தப் பிரதமரும் சொன்னது கிடையது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி எந்தப் பிரதமரும் சொன்னது கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஒரு படி மேலே சென்று, சமஸ்கிருதத்தை விடப் பழமையான மொழி தமிழ் மொழி என்றார்.

தமிழ் மீது உண்மையிலேயே நமக்கு பற்று இருக்கிறது என்று சொன்னால், இதனை நாம் ஒரு ஆண்டு முழுக்கக் கொண்டாடியிருக்க வேண்டும். அதை நாம் செய்யவில்லை. கொண்டாடத் தெரியாதவன் தமிழன். நன்றி மறந்தவன் தமிழன் " என தெரிவித்தது சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x