மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

உயிரிழந்த மாணவன் தீனா
உயிரிழந்த மாணவன் தீனா
Updated on
1 min read

சென்னை

மின்சாரம் தாக்கி 14 வயது மாணவன் உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் - வனிதா தம்பதியின் மகன் தீனா(14). எம்ஜிஆர் நகர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள சாலையில் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி பணிக்காக பள்ளம் தோண்டி உள்ளனர். அந்தப் பணி முடியாததால் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சார வயர் வெளியே வந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையில் அந்தப் பள்ளத்தில் நீர் தேங்கியுள்ளது. அதில் மின்கசிவு ஏற்பட்டு நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாகச் சென்ற தீனா, தண்ணீரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து தண்ணீரிலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதைப் பார்த்த மக்கள் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து, மின் இணைப்பை துண்டித்து தீனாவை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீனாவின் மரணத்துக்கு மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, பொதுமக்களும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணம் மின்சார வாரியத்தின் அலட்சியமே எனக்கூறி, தாமாக முன்வந்து இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு இன்று (செப்.17) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு செய்தார்.

ஆனால், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என உறுதி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in