Last Updated : 16 Sep, 2019 05:13 PM

 

Published : 16 Sep 2019 05:13 PM
Last Updated : 16 Sep 2019 05:13 PM

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி 

சிவகங்கை

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக தள்ளிப்போனது. 2017 நவ.17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்தும் தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (செப்.16) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியை பார்வையிட்டார்.

அவருடன் அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன், எம்எல்ஏக்கள் ராமசாமி, நாகராஜன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் ஆகியோர் உடனிருந்தனர்.

ரஸ்தா பகுதியில் கட்டப்படும் பாதாளச்சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டபோது, அமைச்சரிடம் அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பையை எரிப்பதால் சிரமமாக இருப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து தொழில் வணிக கழகத் தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் வியாபாரிகள் அமைச்சரிடம், "காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சேதமான 71 சாலைகளை சீரமைக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்" என்றனர்.

தொடர்ந்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் தினமும் 19 ஆயிரம் டன் குப்பை சேகரமாகிறது. குப்பையை அகற்றுவது சவாலான ஒன்றாக உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

காரைக்குடி நகராட்சி பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி 70 சதவீதம், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது 40 சதவீதம் முடிவடைந்துள்ளது.

சாலையை செப்பனிட தேவையான நிதி உள்ளது. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் ஆர்வமாக செயல்படுத்தி வருகின்றனர். காரைக்குடி கீழ்ஊருணி ரூ.90 லட்சத்தில் சிறப்பாக தூர்வாரப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துவிட்டதால் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும்'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x