Published : 16 Sep 2019 03:02 PM
Last Updated : 16 Sep 2019 03:02 PM
புதுச்சேரி
எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பதே விருப்பம் எனவும், ஞானபீடம் விருதுக்கும் தொடர்ந்து அவரது பெயரை பரிந்துரைக்கிறோம் எனவும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மொழியியல் பண்பாட்டுஆராய்ச்சி நிறுவனத்தில் 'கி.ரா. 97 நூற்றாண்டை நோக்கி' என்ற தலைப்பில் கரிசல் மேதை எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (செப்.16) நடைபெற்றது. 97-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:
"கி.ராஜநாராயணானுக்கு ஞானபீடம் விருது வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் எங்களை போன்றவர்கள் பரிந்துரைத்து வருகிறோம். ஆனால், எனக்கான ஆசை என்றால் கி.ரா.வுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்பதே விருப்பம். ரவீந்தரநாத் தாகூருக்கு பிறகு இந்தியர்கள் யாருக்கும் நோபல் பரிசு கிடைக்கவில்லை.
உண்மையான இந்தியாவை கி.ரா.வின் படைப்புகளில் பார்க்கலாம். அவரது எழுத்துகளில் நமது வாழ்க்கை பதிவாகி உள்ளது. இப்படியெல்லாம் எழுதிய வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் தங்களது தாய்மொழியில் தான் எழுதினார்கள். அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும்போது எங்கள் தேசத்தைச் சேர்ந்த கி.ரா.வுக்கு நோபல் பரிசு தரக்கோரி கருத்துகளை தெரிவித்து பரிந்துரைத்து வருகிறோம்.
விருது என்பது கி.ரா.வுக்கு மட்டும் கிடைப்பதல்ல.அது நம்முடைய தமிழ் இலக்கியத்துக்கு கிடைக்கக் கூடிய உரிய அங்கீகாரம். இந்தாண்டு ஞானபீடம் விருது தமிழுக்கு கொடுக்கப் போகிறார்கள் என்று கருத்து உள்ளது. இந்த விருதை வாங்குவதற்கு பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்த விருதுக்கு யாரை தேர்வு செய்தாலும் எங்களை போன்றவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளோம். ஏனெனில் விருது வாங்க முயற்சிப்போரால் தவறான முன்னுதாரணமாகி விடக்கூடாது. கண்டிப்பாக இந்தாண்டு அந்த நற்செய்தி வரும்," என்று எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT